Friday, 21 July 2017

காதலன் - The Lover - 3

முந்தைய பகுதி படிக்க 

மழை நாளுக்கு அடுத்த நாள், நல்ல இளவெயில்.  மரக்கிளைகளுக்கு ஊடாக கதிரவனின் ஒளிக்கீற்று அழகாய் வீச, அகில இந்திய வானொலி தனது 7மணி செய்திகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிருப்பதை எதிர் வீட்டு அண்ணன் முகச்சவரம் செய்து கொண்டே கேட்டுக் கொண்டிருக்கிறார்.

காலை 8 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டான் நம் சுந்தர். இந்த முறை அறை நண்பர்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தான்.

நேற்றைய மழையில் தேங்கிய நீரை கவனமாய் தாவித் தாவிச் சென்றான். தொலைவில் உள்ள டீ கடையில் "காதலின் தீபமொன்று ஏற்றினாளே" பாடல் அகில இந்திய வானொலியில் ஓடிக்கொண்டிருக்கிறது. ரிக்ஷா ஓட்டுபவர் உற்சாகமாக எம்ஜிஆர் பாடலை உற்சாகத்துடன் பாடிக்கொண்டே செல்கிறார்.
இன்றைய நாள் உற்சாகமாக இருப்பதை இவனால் உணரமுடிந்தது.

அவன் அந்த பேருந்துநிறுத்தத்தை அடைந்த நேரம் வானிலை அறிக்கை வாசிக்கப்பட்டது. இன்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்ற அந்த அறிவிப்பை அவன் கவனிக்காமல் இல்லை.

தூரத்தில் அந்த பேருந்து வருவதைக் கண்டவுடன் இவனது இதயம் 100கிமீ வேகத்தில் ஓட ஆரம்பித்தது. அதன் ஓட்டம் பேருந்தை விட வேகமாக ஓடி அதன் கடைசி இலக்கை அடைந்தே விட்டது.

பேருந்து இவனை நெருங்க நெருங்க இவனது இதயத்துடிப்பின் சத்தம் இவனுக்கே பலமாக கேட்க ஆரம்பிக்கிறது. அவள் பேருந்தினுள் இருப்பாளோ, என்ற பயம் அவனைத் தொற்றிக்கொண்டது. அவன் புத்திக்குள் சண்டை போட்டுக்கொள்கிறான், தைரியமாக அவளை திட்ட வேண்டும், இல்லை ஏன் அடிச்சிங்க என்றாவது கேட்டு விடவேண்டும் என்று சொல்லிக்கொள்கிறான். அந்தக் குழப்பம் அவன் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது.

பேருந்து நிறுத்தத்தில் நிற்கிறது. அவள் நேற்று நின்ற அதே இடத்தில் நிற்கிறாள். அவளது தோழிகள் அவனைப் பார்த்ததும் சிரிக்கிறார்கள். இவனோ அந்த பக்கம் ஏறாமல், முன்பக்கம் சென்று ஏறிக்கொண்டான். நிதானமாக ஆசுவாசப்படுத்திக் கொண்டு, அவள் எங்கே இறங்குகிறாளோ அங்கேயே இறங்கி கேட்டுவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டான்.

இன்ஜினியரிங் கல்லூரி ஸ்டாப் என்று நடத்துனர் சத்தத்திற்கு ஒரு பெரிய கூட்டமே இறங்கியது. அவளும் இறங்கினாள். இவனும் இறங்கி அவள் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தான். அவளை எப்படி அழைப்பது என்றும் தெரியவில்லை. கை தட்டினான். இவளைத் தவிர மற்ற எல்லாரும் திரும்பி பார்த்தார்கள். இவளது தோழிகள் இவளிடம் சொன்னார்கள்.

அவள் அவனைத் திரும்பி பார்த்தாள்

அவனை நோக்கி நடக்கலானாள். அவனுக்கு வியர்க்க ஆரம்பிக்கிறது. திரும்பி போய்விடலாமா என்று கூட தோன்றியது. அவள் இவனிடம் வந்ததும் "I am Sorry, உங்க நிலைமை புரியாம, நான் அவசரப்பட்டு அடிச்சிட்டேன்" அப்படின்னு சொல்லி விட்டு இவன் பதிலுக்கு காத்திராமல் திரும்பி போய்விட்டாள்.

"சரிங்க இருக்கட்டும்ங்க" அப்படின்னு தலையை ஆட்டிக்கிட்டு நின்னுக்கிட்டு இருக்கிறான் நம்ம சுந்தர். அவளது தோழிகள் அவனைப் பார்த்து சிரிக்கின்றனர்.

இறுதியில் அவளின் அந்த கண்டுகொள்ளாமை, தைரியம் இவனுக்கு பிடிக்கிறது. அவனின் அப்பாவித்தனம் இவளுக்கு பிடித்துப்போகிறது. இருந்தாலும் இது அடுத்த நிலையை அடையுமா என்றெல்லாம் தெரியாது.

இவன் வீடு திரும்பும்முன் மழை கொட்ட ஆரம்பித்திருந்தது.

தொடரும்..

காதலுடன்,
கருப்பசாமி பாண்டியன்.






No comments:

Post a Comment