Wednesday, 19 July 2017

காதலன் - The Lover - 2

முந்தைய பகுதி படிக்க

நம் கதையின் 60வயது கதாநாயகன் சுந்தர் (பெயர் வைத்தாகி விட்டது), ஏன் இந்தியா விட்டு ஃபின்லாந்து சென்றார். அவரை துரத்தியது எது?

வேறென்ன காதல் தான். காதல் தான் ஒரு மனிதனை ஊர் கடத்தும், மாநிலம் கடத்தும், நாடு கடத்தும், ஏன் இந்த உலகை விட்டே கடத்தும் வல்லமை கொண்டதாயிற்றே.

இந்த சிகரெட் அட்டையில் "புகை பிடித்தல் புற்றுநோயை உண்டாக்கும்" என்று போட்டிருக்கும். அதை படித்தும், புகை பிடிப்பவர்கள் போல, இந்த காதலால் ஏற்படும் இன்னல்களை அனுபவித்தும், கண்ணால் கண்டும், காதால் கேட்டும் அதில் விழுபவர்கள் பாக்கியவான்கள். ஆம் காதலின்றி இந்த உலகே சுற்றாதே. பிறகெப்படி அதற்கு எதிராய் எழுதுவது.

சரி கதைநாயகனைப் பற்றிய ஒரு அறிமுகம் தேவை. அவன் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள சாதாரண நகரில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்த பொறியியல் தேர்வு பெற்ற பல்லாயிரம் இளைஞர்களில் ஒருவன். குடும்பத்தில் ஒரே பிள்ளை.

சென்னையில் அவனுக்கு இருந்த ஒரே நண்பன் கிண்டியில் தங்கி வேலை பார்த்து வருகிறான். அவன் அவனது தினசரி செலவும் போக வீட்டிற்க்கு மாதாமாதம் ரூபாய் அனுப்ப வேண்டும். அதனால் அவனை நம்பி இவன் இருக்க முடியாது. வீட்டிலிருந்து வரும் போது ஐந்தாயிரம் ரூபாய் வாங்கி வந்திருந்தான். ஒரு சிறு அறையில் 6பேருடன் 7வது நபராக சேர்ந்தான்.

வந்த முதல் நாளே மாத பேருந்துச்சீட்டு வாங்கியாகி விட்டது.
அவனது அட்டவணை மிகவும் எளிது. காலை எழுந்து, தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் ஏதேனும் இருக்கும் அழைப்பு விளம்பரம் செய்தித்தாளில் பார்க்க வேண்டியது, அந்த கம்பெனிக்கு நேர்காணலுக்கு செல்வது.

இது ஏதோ வனவாசம் என்று நினைத்து விடவேண்டாம். இது எல்லா இளைஞர்களின் வாழ்விலும் அவர்களையும், உலகையும் புரிய வைக்கும் வாழ்வின் மிக முக்கிய பகுதி.

அந்த வாழ்வின் முக்கிய பகுதியின் ஒருநாள் காலை கிண்டியிலிருந்து திருவான்மியூரில் இருக்கும் ஒரு கம்பெனிக்கு நேர்காணலுக்கு செல்ல பேருந்து நிறுத்தத்திற்க்கு சென்று கொண்டிருக்கிறான்.

அது ஒரு மழை நாள். சாலையில் மழைநீர் தேங்கி, வானம் பூமி இறங்கி நீரில் பிரதிபலிக்க. அந்த தேங்கிய நீரில் பேருந்து நகர்வது தெரிகிறது. அது 23C பேருந்து.

அதை ஓடி பிடித்து ஏறினான். படி அருகே நின்றிருந்த பெண்ணின் இடுப்பில் தவறுதலாக கை வைத்துவிட்டான்.

நீங்கள் எப்போதாவது இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது, கண் முன் பூச்சி வந்தால், கண்ணில் பூச்சி படும் முன், மூளை வேகமாக இயங்கி கண்களை மூடும் . அதை விட குறைந்த நேரத்துக்குள் அவனது கன்னத்தில் பளார் என்ற சத்தத்துடன் ஒரு அடி விழுந்தது. அவன் சற்றே தடுமாறி நடந்ததை ஒரு முறை ரீவைண்ட் பண்ணிக் கொள்கிறான். அவனது தவறு புரிகிறது. அந்த பெண்ணை ஏறெடுத்து பார்க்கிறான்.

மஞ்சள் நிறமும், நீலமும் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தாள் அவள். மிகச்சிறிய அணு அளவை விட சற்றே பெரிய பொட்டு அணிந்திருந்தாள். ஒரு நொடி கண்களைக் கண்டான், அதன் ஆழத்தில் பல ஆயிரம் அடி பள்ளத்தில் விழுந்தான். ஆம் பேருந்தில் இருந்து இறங்கி விட்டான்.

இவை அனைத்தும் கண் இமைக்கும் நொடிக்கும் குறைவான நேரத்தில் நடந்து முடிந்தது.

பெண்ணிடம் பேசவே கூச்சப்படும் நம்  சுந்தர் எங்கே எதிர்த்து பேச ?

நடந்தவை அனைத்தையும் அவன் அறை நண்பன் ஒருவன் பார்த்துவிட்டான். சுந்தருக்கு தெரியாது அன்றைக்கு இரவுக்கு இவனுக்கு நடந்த நிகழ்வுதான் ஊறுகாய் என்று.

மாலை அறைக்கு வந்ததும் நண்பர்கள் அனைவரும் இதை வைத்து சுந்தரை கேலி செய்தனர். அதில் ஒருவன் சொன்னான் நீயும் பதிலுக்கு அடித்திருக்கலாம் என்று. உண்மையில் சுந்தருக்கு அந்தப் பெண் மீது கொஞ்சம் கூட கோபமில்லை. அந்த பெண்ணின் நிலையை நன்கே உணர்ந்திருந்தான்.

ஆனால் நண்பர்கள் சொல்லும்போது அவனுக்குள் ஒரு  எண்ணம் தோன்றலாயிற்று. பதிலுக்கு அறையா விட்டாலும், பேசி  இருக்க வேண்டும் என்று.  நண்பர்களிடமும் சொன்னான் நாளை அவள் அதே பேருந்தில் தானே வருவாள்,பார்த்துக் கொள்கிறேன் என்று.

தொடரும் ....

காதலுடன்,
கருப்பசாமி பாண்டியன்.

No comments:

Post a Comment